ஆரணியில் பயிற்சியின்போது மயங்கி விழுந்த கபடி வீரர் உயிரிழப்பு!

 
arani

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பயிற்சியின் போது மயங்கி விழுந்த கபடி வீரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி களத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் வினோத்குமார்(34). கபடி வீரரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி களத்துமேட்டு  தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி, கபடி போட்டி நடைபெற இருந்த நிலையில், இதற்காக களத்துமேட்டு தெருவை சேர்ந்த வினோத்குமார் உள்ளிட்ட கபடி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வினோத்குமார் கோவில் முன்பு கரணம் அடித்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

arani

இதனை அடுத்து, உறவினர்கள் அவரை மீட்டு வேலுர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, வினோத் குமார் கரணம் அடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.