"கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு திட்டம்; அமைச்சரின் தவறான அணுகுமுறையால் தேக்கம்" - கீழ்பவானி ஆயக்கட்டு பாசனதாரர்கள் சங்கம் குற்றச்சாட்டு!

 
lower bhavani

கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு திட்டத்தில் அமைச்சர் முத்துசாமியின் தவறான அணுகுமுறையால் திட்டம் தேக்கமடைந்துள்ளதுடன், பதற்றமான நிலை ஏற்பட்டிருப்பதாக கீழ்பவானி ஆயக்கட்டு பாசனதாரர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அச்சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது, கடந்த அதிமுக ஆட்சியில் கால்வாயை சீரமைக்க ரூ.720 கோடி மதிப்பில் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் பணிகள் நடைபெறவில்லை. அமைச்சர் முத்துசாமியின் தவறான அணுகுமுறையால் திட்டம் தேக்கம் அடைந்துள்ளது. இந்த சீர்குலைவு வேலைகள் அனைத்தும் தவறாக தண்ணீர் எடுத்து பயன்படுத்தும் தொழிலதிபர்களுக்கும், வணிக வேளாண்மை செய்பவர்களுக்கும் ஆதரவாக செய்து வரும் நடவடிக்கைகள் ஆகும்.  

கால்வாய் பிரச்சனையில் முறையாக பதிவுசெய்யப்பட்ட நீர்வளத் துறையின் ஆவணங்களை ஆராயாமலும் உறுதித்தன்மை குறித்து ஆய்வுசெய்யப்பட்ட 2 ஆய்வுகளின் அறிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமலும், இந்த அரசு செயல்பட்டு வருகிறது. பிரச்சனையை சுமூகமாக தீர்ப்பதற்கு பொறுப்பேற்றிருந்த மாவட்ட அமைச்சர் முத்துசாமி, அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நேரடியாக கால்வாயில் பெரும் கூட்டங்களை கூட்டி பதற்றத்தை உருவாக்கி விட்டார். தவறான பரப்புரைகள் நடப்பதற்கு அரசு தரப்பில் இருந்து பதில் எதுவும் தரப்படவில்லை. 

lower bhavani

எனவே ஆயக்கட்டு பாசன உரிமையை பாதுகாப்பதற்காக கீழ்பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாட்டை  ஜூலை 10 ஆம் தேதி சிவகிரியில் நடத்த உள்ளோம். கீழ்பவானி பாசனத்தில் முறைகேடான நீரேற்றுப் பாசனங்களை உடனே தடை செய்யவும், கால்வாயை சீரமைத்து அனைத்து பாசனதார்ரர்களுக்கும் சமச்சீரான தண்ணீர் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாநாடு நடைபெறுகிறது. 

கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு திட்டத்தின் கீழ், 1955 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கால்வாயில் உள்ள பழுதுகளை சீரமைக்கவும், மதகுகளை மறுகட்டுமானம் செய்யவும், கரைகளை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பிலும் அழைத்துப் பேசி பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டிய அமைச்சர் முத்துசாமி பிரச்சனையை சரியான முறையில் கையாளவில்லை. எனவே காலத்தின் அவசியத்lதை உணர்ந்து கால்வாய் சீரமைப்பு பணிகளை உடனே தொடங்க வேண்டும், இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.