வால்பாறைக்கு சுற்றுலா வந்த கேரள மாநில இளைஞர் ஆற்றில் மூழ்கி பலி!

 
drown

கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா கேரளாவை சேர்ந்த இளைஞர், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் தலச்சேரி பகுதியை சேர்ந்தவர் முகமது மன்சூர் (38). குவைத்தில் பணிபுரிந்து வரும் இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில், முகமது மன்சூர், தனது மனைவி பரிதா, 2 குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலா வந்திருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று பிற்பகல் நல்லகாத்து எஸ்டேட் அருகே சோலை ஆற்றில் இறங்கி முகமது மன்சூர் மற்றும் குடும்பத்தினர் குளித்துள்ளனர்.

drowned

அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற மன்சூர், நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனை க்ணடு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் வால்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.  நீண்ட நேர தேடலுக்கு பின்னர் அவர்கள் முகமது மன்சூரை சடலமாக மீட்டனர்.

பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவி - பிள்ளைகள் கண்முன்னே கேரள இளைஞர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.