கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு... சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு!

 
kumbakarai

பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவியின் நீர்பிடிப்பு பகுதியான கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இதனால் அருவிக்கு நீர்வரத்து சீராக இருந்து வந்தது. இந்த நிலையில், நேற்று மாலை கும்பக்கரை அருவிக்கு மேல் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

rain

இதனால் அருவியில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும், தடுப்பு கம்பிகளை தாண்டி வெள்ளநீர் செல்வதால் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க வனத்துறையினர் நேற்று மாலை முதல் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர். அருவியில் நீர்வரத்து சீராகும் வரை தடை தொடரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.