ராமநாதபுரம் அருகே சொத்து தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை... 3 பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!
ராமநாதபுரம் அருகே சொத்து தகராறில் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள அழகன் வயல் கிராமத்தை சேர்ந்தவர் ராசு. தொழிலாளி. அதே கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். உறவினர்களான இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று ராசு மற்றும் சங்கர் குடும்பத்தினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் படுகாயமடைந்த ராசு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.பி. பட்டினம் காவல் நிலைய போலீசார், உயிரிழந்த ராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் சங்கர், அவரது உறவினர் மதன் மற்றும் 3 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.