திருப்பத்தூர் அருகே டிராக்டர் சக்கரம் ஏறியதில் தொழிலாளி பலி!

 
tirupattur

திருப்பத்தூர் அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த  தொழிலாளி மீது பின்புற சக்கரம் ஏறியதில். அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கோடியூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(48). இவர் திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள சின்ன கந்திலி பகுதியில் செங்கல்சூளை நடத்தி வருகிறார். இங்கு கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லேத்திரபட்டியை சேர்ந்த கோவிந்தசாமி (21) என்பவர் தொழிலாளி ஆக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று செங்கல்சூளையில் இருந்து டிராக்டரில் கற்களை ஏற்றிக்கொண்டு குட்டகொல்லிவட்டம் பகுதிக்கு சென்றுள்ளனர். டிராக்டரை ஜீவா என்பவர் ஓட்டியுள்ளார். தொழிலாளி கோவிந்தசாமி, டிராக்டரில் ஏற்றிவந்த கற்கள் மீது அமர்ந்து சென்றுள்ளார்.

tirupattur gh

சின்ன கந்திலி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக டிராக்டரில் அமர்ந்திருந்த கோவிந்தசாமி தவறி கீழே விழுந்தார். அப்போது, அவர் மீது டிராக்டரின் பின்புற சக்கரம் ஏறியதில், கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கந்திலி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.