மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை... செய்யாறு அருகே சோகம்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மனைவி இறந்த வேதனையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மோகன். இவரது இளைய மகன் சுரேஷ். இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கோவில் திருவிழாக்களில் சிப்ஸ் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், சுரேஷின் மனைவி அமுதவள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் சுரேஷ் மனவேதனையுடன் காணப்பட்டு வந்துள்ளார். மேலும், மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள அசமானபேட்டை பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாவில் வியாபாரம் செய்வற்காக சுரேஷ் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளனர்.
சம்பவத்தன்று இரவு மனவேதனையில் இருந்த சுரேஷ் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மோரணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.