பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா : ஈரோடு மாவட்டத்திற்கு வரும் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 
guntam

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி, வரும் 22ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து, ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன்  கோவில் 2022ஆம்  ஆண்டு திருவிழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கி வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், வரும் 22ஆம் தேதி குண்டம் பெருந்திருவிழா நடைபெற உள்ளதால் அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்று, வரும் 22ஆம் தேதி செவ்வாய்கிழமை ஈரோடு மாவட்டத்தில்  உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.

bannari amman

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு  வரும் 26ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. கல்லூரி/ பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும், தேர்வுகள் முன்கூட்டி அறிவித்தபடி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படும் விடுமுறை அல்ல என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

உள்ளூர் விடுமுறை நாளான வரும் 22ஆம் தேதி அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டியது எனவும் ஆணையிடப்படுவதாக, ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.