மகன் இறந்த வேதனையில் லாட்ஜ் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை... ஈரோட்டில் சோகம்!

 
suicide

ஈரோட்டில் மகன் தற்கொலை செய்து கொண்டதால் வேதனையில் லாட்ஜ்  உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு இடையன்காட்டு வலசு, செங்குட்டுவன் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (71). இவர் ஈரோடு மேட்டூர் சாலையில் லாட்ஜ் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதேபோல், அவரது தம்பி குணசேகரனும், சில ஆண்டுகளுக்கு முன்பு லாட்ஜ் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அடுத்தடுத்து மகன், தம்பி உயிரிழந்ததால் ஈஸ்வரன் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

erode gh

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல் லாட்ஜுக்கு சென்ற ஈஸ்வரன் ஒரு அறைக்குள் சென்று திடீரென கதவை உள்புறமாக சாத்திக் கொண்டுள்ளார். நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்காததால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் மாற்று சாவி போட்டு கதவை திறந்துள்ளனர். அப்போது, ஈஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தொங்கினார்.

இதுகுறித்து லாட்ஜ் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், ஈரோடு டவுன் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகன், தம்பி தற்கொலை செய்து கொண்டதால் விரக்தியில் லாட்ஜ் உரிமையாளர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.