பென்னாகரம் அருகே பெரியம்மாவை அடித்துக் கொன்ற நபர் கைது!
பென்னாகரம் அருகே குடும்ப தகராறில் பெரியம்மாவை அடித்துக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள ஜக்கம்பட்டி மேல் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயி. இவருக்கு குப்பம்மாள், செம்பா என இரண்டு மனைவிகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் லட்சுமணன் உடல்நல குறைவினால் உயிரிழந்துவிட்டார். இதனால் குப்பம்மாளை, செம்பாவின் மகனான முனுசாமி என்பவர் கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில், சொத்து பிரச்சினை தொடர்பாக குப்பம்மாளுக்கும், முனுசாமி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரத்தில் முனுசாமி தாக்கியதில், குப்பம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனை அடுத்து, முனுசாமி அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார், குப்பம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த முனுசாமியை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில்ல ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.