தென்காசி அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த நபர் கைது ; 280 மதுபாட்டில்கள் பறிமுதல்!

 
liquor

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே சட்ட விரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து  280 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜகோபாலபேரி பகுதியில் சிலர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், வீரகேரளம்புதூர் உதவி ஆய்வாளர் அன்னலட்சுமி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

tenkasi ttn

அப்போது, ராஜகோபாலபேரியை சேர்ந்த முருகன் என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்ய முயற்சித்தபோது, முருகன் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்காமல், அவர்களை அவதூறாக பேசி பணிசெய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 280 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முருகன் (52) மீது சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தல், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.