தூத்துக்குடியில் செல்போன் கோபுரத்தில் பேட்டரி திருடிய நபர் கைது... 10 பேட்டரிகள், 2 ஆட்டோக்கள் பறிமுதல்!

 
battery theft

தூத்துக்குடியில் தனியார் செல்போன் கோபுரத்தில் பேட்டரிகளை திருடிய நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.70 ஆயிரம் மதிப்பிலான பேட்டரிகள் மற்றும் 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி குறிஞ்சி நகர் பகுதியில் தனியாருக்கு செல்போன் கோபுரம் அமைந்துள்ளது. கடந்த 24 ஆம் தேதி இந்த செல்போன் கோபுரத்தில் உள்ள 10 பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து செல்போன் கோபுர பாதுகாவலர் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

auto

அதில் பேட்டரிகளை திருடியது தாளமுத்துநகர் பிரதான சாலை பகுதியை சேர்ந்த அருள்ராஜா(42) என தெரியவந்தது. இதனை அடுத்து, அருள்ராஜாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 10 பேட்டரிகள் மற்றும்  திருட்டுக்கு பயன்படுத்திய 2 ஆட்டோக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதான  அருள்ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.