ஈரோட்டில் தனியார் தொலைக்காட்சி சார்பில் ‘மங்கையர் திருவிழா 2022’

 
colors

ஈரோட்டில் கலர்ஸ் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற மங்கையர் திருவிழா 2022 நிகழ்ச்சியில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சார்பில் ஈரோட்டில் சாதனை படைத்து வரும் பெண்களை கவுரவிக்கும் விதமாக ‘மங்கையர் திருவிழா 2022’எனும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் பெண்கள்  கலந்து கொண்டனர். விழாவில் பெண்களின் சாதனைகளை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர்கள் பப்பு, தர்ஷினி ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடிக்கும் நடிகர்கள் நக்ஷத்ரா, ஷ்யாம், நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், பவித்ரா கவுடா, அமல்ஜித் மற்றும் சமீர் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையாளர்களுடன் கலந்துரையாடினர்.

erode

இதில் பார்வையாளர்களுக்காக பல்வேறு போட்டிகள், பாடல்கள், மிமிக்ரி, அதிர்ஷ்ட குலுக்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் ஏராளமான பெண்கள் கோல்டன் ‘பெட்டல் கிளப்’பில் சேர விண்ணப்பித்தனர், இது இந்த தொலைக்காட்சியை தொடர்பு கொள்ளவும், தங்கள் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கவும், சிறப்பு சலுகைகளை பெறவும் இந்த தொலைக்காட்சி துவக்கி உள்ள பிரத்யேக கிளப் ஆகும்.மேலும் சமூகத்திற்காக பெண்கள் ஆற்றிய சேவைகளை பாராட்டி அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தக பிரிவு தலைவர் எஸ்.ராஜாராமன் கூறுகையில், மங்கையர் திருவிழா 2022 மாபெரும் வெற்றியடைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள சாதனை பெண்களை, வெளி உலகிற்கு கொண்டு வரும் வகையில் கோவை, திருப்பூர், மதுரை, நெல்லை மற்றும் தூத்துக்குடியிலும் மங்கையர் திருவிழா நடைபெற உள்ளது. இதன் மூலம் பெண்மையின் உணர்வை போற்றி, அவர்களின் சாதனைகளை பாராட்டுவதை எங்கள் தொலைக்காட்சி முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.