திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை... விராலிமலை அருகே சோகம்!

 
fire accident

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகேயுள்ள சரளபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். விவசாயி. இவரது மகள் கனிமொழி(23). இவருக்கு, கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருச்சி பாலக்கரையை சேர்ந்த விஜய் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை தன்னை விட 10 வயது மூத்தவர் என்பதால், கனிமொழி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் திருவிழாவுக்காக பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்த கனிமொழி, பின்னர் மீண்டும் கணவர் வீட்டிற்கு செல்ல மருத்து அங்கேயே இருந்துள்ளார்.

trichy gh

இதனை குடும்பத்தினர் கண்டித்ததால் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது கனிமொழி உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று கனிமொழி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமான 11 மாதத்தில் கனிமொழி உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.