2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாய் தூக்கிட்டு தற்கொலை... குடும்ப தகராறில் விபரீதம்!

 
suicide suicide

திருக்கோவிலூர் அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள அம்மன்கொல்லை மேடு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு கௌரி (27) என்ற மனைவியும், அருணா(4), பூமிநாதன்(2)  என இரு பிள்ளைகளும் உள்ளனர்.இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் கௌரி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.  தொடர்ந்து, நேற்று முன்தினம் தம்பதியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. 

kallakurichi ttn

இதனால் வாழ்வில் விரக்தியடைந்த கௌரி தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, 2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தனது விவசாய தோட்டத்துக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து விஷம் கலந்த பாலை குழந்தைகளுக்கு கொடுத்த கௌரி, பின்னர் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு குழந்தைகள் அலறி துடிக்கவே அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று, குழந்தைகளை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தொடர் சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று கௌரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.