அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவதை கண்டித்த தாய்... விரக்தியில் பொறியியல் மாணவர் தற்கொலை!
மதுரையில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததால், பொறியியல் கல்லுரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளளது.
மதுரை ஊமச்சிக்குளம் மாரணி பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி. துணை ராணுவப்படை வீரர். இவரது மனைவி ரஜினிமாலா. இவர் ஊமச்சிக்குளம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மூத்த மகன் ரகுநாத்(21). டெல்லியில் பொறியியல் படித்து வந்த ரகுநாத், தற்போது வீட்டில் இருந்து ஆன்லைன் வழியாக படித்து வந்தார். இந்த நிலையில், ரகுநாத் அதிக நேரம் செல்போனில் நேரத்தை செலவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் தாய் ரஜினிமாலா அவரை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை ரஜினிமாலா வழக்கம் போல் பணிக்கு புறப்பட்டு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த ரகுநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிமுடிந்து வீடுதிரும்பிய அவர், மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். தகவல் அறிந்து வந்த ஊமச்சிக்குளம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் ஊமச்சிக்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.