போடி அருகே தாய், மகள் தீக்குளித்து தற்கொலை... குடும்ப வறுமையால் சோகம்!

 
fire accident

தேனி மாவட்டம் போடி அருகே வறுமையால் தாய், மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லுசாமி. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி முத்துலெட்சுமி(26). இவர்களுக்கு 8 வயதில் ஹேமாஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார். நல்லுசாமியின் பெட்டிக்கடையில் போதிய வருமானம் இல்லாததால், முத்துலட்சுமி தனியார் அச்சகம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.

bodi

எனினும் வருமானம் குறைவாக இருந்ததால் தம்பதியினர் இருவரும் சிரமப்பட்டு வந்துள்ளனர். முத்துலட்சுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. எனினும் குடும்ப சூழல் காரணமாக அவர் சிகிச்சை பெறாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை நல்லுசாமி வெளியே புறப்பட்டு சென்ற நிலையில், வீட்டில் முத்துலட்சுமி, அவரது மகள் ஹேமாஸ்ரீ ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பின்னர் இருவரும் உடல் முழுவதும் தீப் பற்றிய நிலையில் அலறி துடித்துள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று, அவர்கள் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவர்களை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே சிறுமி ஹேமாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வறுமையால் தாய், மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.