மகன் இறந்த துக்கத்தில் தாய் தீக்குளித்து தற்கொலை... திண்டுக்கல்லில் சோகம்!
திண்டுக்கல்லில் மகன் இறந்த துக்கத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி (60). திமுக பிரமுகரான இவர் உடல் நல குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். இதனை அடுத்து, அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர். மகன் மீது அதிக அன்பு வைத்திருந்த அவரது தாய் பாண்டியம்மாள் (87), பாண்டியின் மறைவால் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென வீட்டின் மாடிக்கு சென்ற அவர், அங்கு மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடிச்சென்று பாண்டியம்மாள் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் பலத்த தீக்காயம் அடைந்த மூதாட்டி பாண்டியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகன் இறந்த துக்கத்தில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.