திண்டுக்கல் அருகே கூலி தொழிலாளி வெட்டிக்கொலை - மர்மநபர்கள் வெறிச்செயல்!
திண்டுக்கல் அருகே கூலி தொழிலாளி மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள சித்தரேவு அமைதிப்பூங்கா பகுதியை சேர்ந்தவர் சடையாண்டி(61). கூலி தொழிலாளி. இவருக்கு பொன்னுதாய் என்ற மனைவியும், ஒரு மகன் உள்பட 5 பிள்ளைகளும் உள்ளனர். சடையாண்டி, நாள்தோறும் இரவு நேரத்தில் அமைதிப்பூங்கா பகுதியில் உள்ள வனத்துறை கட்டிடத்தில் படுத்து துங்கி வந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் வனத்துறை கட்டிடத்திற்கு துங்க சென்ற நிலையில், நேற்று அதிகாலை உடலில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள், இதுகுறித்து பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடையாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சடையாண்டி முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர். மேலும், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.