ராசிபுரம் அருகே ஆண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு!

 
dead

ராசிபுரம் அருகே தொட்டியில் படுத்திருந்த 3 வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அக்கலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோபி. இவர் நாமகிரிப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இத்தம்பதிக்கு 3 வயதில் முகிலன் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நேற்று காலை கோபி வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து, பிரியா குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து, தொட்டியில் தூங்க வைத்துள்ளார். பின்னர், அவர் வீட்டு வேலைகளை கவனித்து கொண்டிருந்துள்ளார். 

rasipuram

இதனிடையே, நீண்ட நேரமாகியும் குழந்தை முகிலன் கண் விழிக்காததால், கோபியின் தாய் சுகுணா குழந்தையை எழுப்ப முயற்சித்தார். அப்போது, குழந்தை மூச்சு பேச்சின்றி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுகுணா மற்றும் குடும்பத்தினர் குழந்தையை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை முகிலனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், குழந்தையின் கழுத்தில் காயம் இருப்பதும் தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த நாமகிரிபேட்டை போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து கோபி அளித்த புகாரின் பேரில், நாமகிரிபேட்டை போலீசார், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கழுத்தில் அணிந்திருந்த தாயத்து கயிறு இறுக்கியதால் குழந்தை உயிரிழந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. எனினும் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே குழந்தை இறப்புக்கான காரணம் தெரிய வரும். தொட்டியில் தூங்கிய குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.