திருமணமான 4 மாதத்தில் இளம்பெண் மர்ம மரணம்... சாத்தூர் அருகே சோகம்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே திருமணமான 4 மாதத்தில் கர்ப்பிணி பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நல்லான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருக லெட்சுமி(20). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நாருகாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஜான் பாண்டியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. முருக லெட்சுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனிடையே கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் முருக லெட்சுமி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று விட்டில் தனியாக இருந்த அவர், உடலில் தீக்காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த இருக்கன்குடி காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து முருகலெட்சுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார், வழக்குப்பதிவு செய்து முருக லட்சுமி குடும்ப தகராறில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். திருமணமான 4 மாதத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


