வால்பாறை அருகே ஆண் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை!

 
leopard

கோவை மாவட்டம் வால்பாறை வரட்டுப்பாறை பகுதியில் ஆண் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, வால்பாறை வரட்டுப்பாறை எஸ்டேட் அருகே உள்ள வருவாய் நிலத்தில் உஸ்மான் என்பவர் வசித்து வருகிறார். இவரது டீக் கடைக்கு பின்புறம் வைக்கப்பட்டிருந்த கோழி கூண்டில் கால் சிக்கிய நிலையில, இன்று காலை ஆண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதனை கண்ட உஸ்மான் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் இது குறித்து உடனடியாக வால்பாறை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

leopard

 அதன் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கிருந்த ஆதாரங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து, இதுகுறித்து வனத்துறை கால்நடை மருத்துவ அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சிறுத்தைக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் பின்னரே, சிறுத்தை விஷம் வைத்து கொல்லப்பட்டதா? அல்லது மின்சாரம் தாக்கி இறந்ததா அல்லது வேறு ஏதும் காரணமா? என தெரியவரும். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.