திருப்பத்தூர் அருகே அழகுநிலைய உரிமையாளர் மர்ம மரணம்... மனைவி மீது போலீசில் புகார்!

 
tirupattur

திருப்பத்தூர் அருகே அழகு நிலைய உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து, அவரது மனைவி மீது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.

திருப்பத்தூர் அருகே உள்ள ரகுபதியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் நவீன்குமார் (29). இவர் அதே பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி விசித்ரா (23). இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மோனிஷ் (4), தன்ஷிகா( 2) என 2 பிள்ளைகள் உள்ளனர். நவின்குமாரும், விசித்ராவின் அத்தை மகனான குமாரம்பட்டியை சேர்ந்த சீனிவாசன்( 24) என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி காலை நவீன்குமாரை, சீனிவாசன் மது அருந்துவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். 

tirupattur

பின்னர், மதியம் அண்ணாநகர் கட்டியானூர் பகுதியில் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வாயில் நுரையுடன் கீழே விழுந்து கிடந்ததாக கூறி நவீன்குமாரை, தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் மீட்டு வீட்டில் விட்டு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து, இரவு 7 மணிக்கு விசித்ரா, தனது கணவர் சுயநினைவு இன்றி இருப்பதாக கூறி உறுவினர்களிடம் கூறி உள்ளார்.  இதனை அடுத்து, அவரை குடும்பத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நவீன்குமார் 2 மணி நேரத்திற்கு முன்னே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து, அவரது  உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, விசித்ரா, அத்தை மகனான சீனிவாசனுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சந்தேகமடைந்த நவீன்குமாரின் தாயார், மகனின் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி, விசித்ரா மீது திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.