ஈரோடு அருகே விஷ பூச்சி கடித்து வடமாநில தொழிலாளி பலி!
ஈரோடு அருகே விஷ பூச்சி கடித்து தனியார் மில்லில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒடிசா மாநிலம் பவாத் மாவட்டத்தை சேர்ந்தவர் பிகாஸ் போக்தா (20). இவர் ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டை அடுத்த எம்.எஸ். மங்கலம் பகுதியில் உள்ள தனியார் மில்லில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மில்லில் உள்ள தனது அறையில் இருந்த பிகாஸ் போக்தாவை, விஷ பூச்சி ஒன்று கடித்துள்ளது. இதனால் அவருக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர், அதே நிறுவனத்தில் பணிபுரியும் தனது அண்ணன் தரணி போக்தாவுக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில், தரணி போக்தா வந்து பார்த்தபோது, பிகாஸ் போக்தாவின் வலது கை முழுவதும் வீக்கமடைந்து, அவர் மயங்கி உள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக பிகாஸ் போக்தாவை மீட்டு கொல்லம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிகாஸ் போக்தாவை அழைத்துச்சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிகாஸ் போக்தா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் ஈரோடு தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


