திருவாரூர் அருகே செவிலியர் தூக்கிட்டு தற்கொலை... திருமணமான 6 மாதத்தில் சோகம்!

 
suicide

திருவாரூர் அருகே திருமணமான 6 மாதத்தில் அரசு மருத்துவமனை செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கிருத்திகா(28). இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கிருத்திகாவுக்கு, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகேயுள்ள பண்டாரவடை திருமாளம் பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் கிருத்திகா, பணியிட மாறுதல் பெற்று பேரளம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். 

thiruvarur

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட கிருத்திகா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே கிருத்திகா பரிதாபமாக உயிரிழந்தார். 

கிருத்திகாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பேரளம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 6 மாதத்தில் கிருத்திகா உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.