கூடலூரில் அரசுப்பேருந்து மோதியதில் மூதாட்டி பலி!

 
accident

நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசுப்பேருந்து மோதியதில் படுகாயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சி சூண்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி கனகம்மாள் (65). இவர் நேற்று முன்தினம் மதியம் கூடலூர் பஜார் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகே சாலையை வேகமாக கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக கூடலூரில் இருந்து மேல் கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து அவர் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் கனகம்மாள் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

dead

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று கனகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கூடலூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையை கடக்க முயன்ற மூதாட்டி அரசுப்பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.