கோவை அருகே சாலையோரம் நின்ற லாரி மீது ஆம்னிவேன் மோதல் - 2 குழந்தைகள் பலி!

 
accident

கோவை அருகே சாலையோரம் நின்ற லாரியின் மீது ஆம்னிவேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 5 பெண்கள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

ஈரோட்டை சேர்ந்தவர் நிசார் அலி. இவர் சமீபத்தில் ஆம்னி கார் ஒன்றை செகனண்ட்டில் வாங்கி உள்ளார். இதனை தொடர்ந்து, நிசார் அலி, தனது நணபர் ராமச்சந்திரன் என்பவரது குடும்பத்தினருடன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தர்காவுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு, பின்னர் காரில் ஈரோட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.காரை மோனிஷ் என்பவர் ஓட்டிச்சென்றார்.

dead body

கோவை மாவட்டம் வாளையாறு அருகே உள்ள காக்கா சாவடி என்ற இடத்தின் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக கார் சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் அதிவேகமாக மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த சிறுமி அஞ்சுதா ஸ்ரீ(5), சிறுவன் மித்ரன்(3) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ராமச்சந்திரன், ஓட்டுநர் மோனிஷ் மற்றும் 5 பெண்கள் என 7 பேர் படுகாயம் அடைந்தனர். நிசார் அலி லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், விபத்தில் பலியான 2 குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புதிதாக வாங்கிய காரில் கேரளாவுக்கு சென்று திரும்பியபோது விபத்தில் 2 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.