கட்டிட வரைபட அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்... ஊராட்சி செயலாளர் கைது!

 
bribe bribe

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கட்டிட வரைபட அனுமதி வழங்க ரூ.20 லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்தவர் திருமலைராஜன் (50). இவர் மேட்டமலை பகுதியில் புதிதாக பட்டாசு கடை கட்டுவதற்கு, கட்டிட வரைபட அனுமதி கேட்டு, ஊராட்சி செயலாளர் கதிரேசனிடம் விண்ணப்பித்து உள்ளார். அப்போது, கட்டிட வரைபட அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கதிரேசன் கேட்டதாக கூறப்படுகிறது.

arrest

லஞ்சம் கொடுக்க விரும்பாத திருமலைராஜன், இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.  அதன் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை திருமலைராஜனிடம் கொடுத்து, அதனை ஊராட்சி செயலாளரிடம் வழங்கும்படி அறிவுத்தினர். அவ்வாறே, திருமலைராஜன்  ஊராட்சி அலுவலகத்தில் வைத்து கதிரேசனிடம் ரூ.20 ஆயிரம் பணத்தை வழங்கினார்.

அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், கதிரேசனை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து,அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.