மண்டைக்காடு அருகே பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு... பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
petrol bomb

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே நேற்றிரவு பாஜக பிரமுகர் வீட்டில் மர்மநபர்கள் இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. 

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே கருமன்கூடல் பகுதியை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். தொழிலதிபரான இவர், பாஜகவில் நிர்வாகியாக பொறுப்பு வகித்து வருகிறார். நேற்று இரவு கல்யாண சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது இரவு 10.51 மணியளவில் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் அவரது வீட்டில் அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. இதனை தொடர்ந்து, மர்மநபர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். பலத்த வெடி சத்தம் கேட்டு வெளியே வந்த கல்யாண சுந்தரம் மற்றும் குடும்பத்தினர்  பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

petrol bomb

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மண்டைக்காடு போலீசார், சம்பவ இடத்தில் உள்ள தடயங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஹெல்மட் அணிந்து வந்த மர்மநபர் பெட்ரோல் குண்டைவீசிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மர்மநபர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். கோவை, ஈரோடு, மதுரை மாவட்டங்களை தொடர்ந்து, குமரியிலும் பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.