போளூரில் மின்சாரம் தாக்கி பிளஸ் 1 மாணவர் பலி... மாடியில் விளையாடியபோது நேர்ந்த சோகம்!
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வீட்டின் மாடியில் விளையாடியபோது மின்சாரம் தாக்கி 11ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வசந்தம் நகரில் வசித்து வருபவர் சுரேஷ்பாபு. இவர் அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அரவிந்த்(16). இவர் ஆரணியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த அரவிந்த், நண்பர்களுடன் வீட்டின் மாடியில் விளையாடி உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டின் வழியாக செல்லும் மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் அரவிந்த் மயங்கி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அரவிந்தை மீட்டு போளுர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அரவிந்த் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, அரவிந்தின் தந்தை சுரேஷ்பாபு அளித்த புகாரின் அடிப்படையில் போளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.