ஜோலார்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவி பலி!

 
dead

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஹீட்டரில் தண்ணீர் சூடுசெய்த போது மின்சாரம் தாக்கி பிளஸ் 2 மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள பெருமாள்சாமி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல். இவரது 17 வயது மகள் ரத்னா தேவி. இவர் தாமலேரி முத்தூரில் உள்ள அரசுப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த ரத்னா தேவி, மாலையில் குளிப்பதற்காக தண்ணீரை சூடுசெய்ய ஹீட்டர் கருவியை ஆன் செய்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியதில்,  அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

tirupattur gh

இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை ரத்தினவேல் அளித்த புகாரின் அடிப்படையில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.