வேலூரில் திருடுபோன 60 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்!

 
vellore

வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் பொதுமக்கள் தவறவிட்ட சுமார் ரூ.9 லட்சம் மதிப்பிலான 60 செல்போன்களை போலீசார் மீட்டு, அவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாத காலத்தில் செல்போன்கள் திருட்டு மற்றும் தவறவிட்டதாக கூறி பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. அவற்றின் மீது மாவட்ட எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் பிரிவு போலீசார், செல்போன்களின் ஐஎம்ஏ எண்ணை வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அதில் 3 மாதத்தில் மாயமான 100 செல்போன்களில் 60 போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து, நேற்று வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் கலந்துகொண்டு, செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். 

vlr

இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி. ராஜேஷ் கண்ணன், வழிப்பறி, வீடு புகுந்து திருடும் நிலை மாறி தற்போது இணையவழியில் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதாகவும், நாளுக்கு நாள் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். எனவே இணையவழி மோசடியால் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தால் தான் மோசடியில் ஈடுபட்டவரின் வங்கி கணக்கை முடக்கி பணத்தை மீட்க முடியும் என கூறினார். அவ்வாறு இல்லாவிட்டால் மோசடி நபர் அந்த பணத்தை வங்கியில் இருந்து எடுத்துவிடுவார் என்றும் தெரிவித்தார்.

vlr

மேலும், இணைய வழி மோசடியில் பணத்தை இழந்தவர்கள் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி, டிஎஸ்பி பூபதிராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.