திருப்புவனம் அருகே மதுபோதையில் உதவி ஆய்வாளரை தாக்கிய காவலர் கைது!

 
poovanthi

சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதை கண்டித்த உதவி ஆய்வாளரை தாக்கிய காவலர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழபூவந்தி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் முத்துப்பாண்டி. இவர் இளையான்டிகுடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முத்துபாண்டி மதுபோதையில் சட்டையின்றி பூவந்தி கடை வீதியில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு சென்ற பூவந்தி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பரமசிவம், முத்துப்பாண்டியை கண்டித்து வீட்டிற்கு அனுப்பி உள்ளார். 

poovanthi

இதனால் ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி, நேற்று அதிகாலை சோதனைச்சாவடியில் பணியிலிருந்த உதவி ஆய்வாளர் பரமசிவத்திடம் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை கல்லால் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த உதவி ஆய்வாளர் பரமசிவம் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பூவந்தி போலீசார், காவலர் முத்துப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். முன்னதாக, மதுபோதையில் உயர் அதிகாரிகளை அவதுறாக பேசிய புகாரில் முத்துப்பாண்டி பணியிடை நீக்கம் செய்யப்பட்டடு, சமீபத்தில் மீண்டும் பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.