பட்டுக்கோட்டை அருகே பைக் மீது தனியார் பேருந்து மோதல்; அரசுப்பள்ளி ஆசிரியர் பலி!

 
accident

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் மதுரையை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் தத்தனேரி பகுதியை சேர்ந்தவர் சிவன்ராஜ்(32). இவர் காரைக்குடி அருகே உள்ள தீர்த்தலைக்காடு அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், சிவன்ராஜ், தனது பணி பதிவேடு புத்தகத்தை வாங்குவதற்காக முன்னதாக பணிபுரிந்த பட்டுக்கோட்டை அடுத்துள்ள ஆலத்துர் அரசுப் பள்ளிக்கு நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பட்டுக்கோட்டை அருகே உள்ள மகாராஜா சமுத்திரம் என்ற இடத்தில் ஆற்று பாலத்தில் சென்றபோது, அவரது இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த தனியார் பேருந்து மோதியது. 

pattukottai

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் சிவன்ராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் பட்டுக்கோட்டை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஒட்டுநர் புதுக்கோட்டையை சேர்ந்த பாலகிருஷ்ணனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.