தேனி அருகே தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் மர்மமான முறையில் உயிரிழப்பு!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தனியார் பள்ளி ஓட்டுநர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த ஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் தனியார் பள்ளி பேருந்து ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜான்சி ராணி. இவர்களுக்கு யோகதர்ஷன் (12) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக ஜான்சி ராணி கணவரை பிரிந்து, தனது மகனுடன் கரையான்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதனால் தங்கராஜ், வீட்டில் தனியாக வசித்து வந்தார். மகன் யோகதர்ஷன், அவ்வப்போது சென்று தந்தையை சந்தித்து வந்துள்ளார். அதன்படி, கடந்த சனிக்கிழமை மாலை தந்தையை பார்ப்பதற்காக ஓடைப்பட்டிக்கு சென்றுள்ளார்.
அப்போது, அவரது வீடு உட்புறமாக பூட்டி இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த யோகதர்ஷன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துச் சென்று பார்த்துள்ளார். அப்போது, தங்கராஜ் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த ஓடைப்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கராஜின் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி அவரது மனைவி ஜான்சிராணி அளித்த புகாரின் அடிப்படையில் ஒடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.