சேலத்தில் வரும் 26ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் கார்மேகம் தகவல்!

 
collector

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,  சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற்றுக்கொண்டிருந்த சிறு அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், இனி வரும் மாதங்களின் 2ஆம் மற்றும் 4ஆம் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடைபெற உள்ளது.

இதன்படி, வரும் வெள்ளிக்கிழமை 26.08.2022  அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளை சேர்ந்த சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

salem employment

சேலம் கோரிமேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com  என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427 - 2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

பணிக்காலியிடங்களுக்கு நபர்களை தேர்வு செய்யவுள்ள தொழில் நிறுவனங்களும், சேலம் மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் அதிக எண்ணிக்கையில் இம்முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.