கோவையில் டாஸ்மாக் மதுபானக்கூடத்தை முற்றுகையிட்டுபொதுமக்கள் போராட்டம்!

 
cbe

கோவை மாவட்டம் தடாகம் அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் தடாகம் அருகே உள்ள கே.என்.ஜி. புதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம், சமீபத்தில் டாஸ்மாக் மதுபானக் கூடமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் டாஸ்மாக் மதுபானக்கூடத்தை மூட வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும், மதுபானக்கூடத்தின் அருகிலேயே பள்ளி செயல்பட்டு வரும் நிலையில், மதுப்பிரியர்களால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அச்சமடைந்து உள்ளதாகவும், இரவு நேரங்களில் பெண்கள் மாணவர்கள் அந்த வழியாக செல்ல அச்சமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

cbe

இந்த நிலையில், நேற்று டாஸ்மாக் மதுபானக்கூடத்தை மூட வலியுறுத்தி, அந்த பகுதியை ஏராளமான ஆண்கள், பெண்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தடாகம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக்கூடத்தை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.