மதுஅருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலை!
திருச்சி அருகே மதுஅருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் அரசுப்பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி நாச்சிக்குறிச்சி கைராசி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் (72). இவரது மகன் ஜெகதீஷ்(46). இவர் திருச்சி மாவட்டம் திருவெள்ளரை அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். மேலும், மனைவியுடன், சோமரசம்பேட்டை ரங்கலெட்சுமி நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை சந்திரசேகரன், தனது மனைவியுடன் மகனை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, ஜெகதீஸ் மதுஅருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இதனால் சந்திரசேகரன், மகன் ஜெகதீஸ் மற்றும் மருமகளை கண்ணடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஸ், தனது அறைக்குள் சென்று கதவை உட்புறமாக பூட்டிக் கொண்டுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த மனைவி கதவை தட்டியுள்ளார். ஆனால் உள்ளே இருந்து பதில் வராததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துச் சென்று பார்த்தார்.
அப்போது, ஜெகதீஸ் தனது வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக தொங்கினார். இதனை கண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.