வேலூர் அருகே காரில் கடத்திய ரூ.2.39 லட்சம் குட்கா பறிமுதல் - ஒருவர் கைது!

 
gutka

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு ஆம்னி வேனில் கடத்த முயன்ற ரூ.2.39 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் ஆபரேஷன் 2.0 என்ற பெயரில் போலீசார், கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பேரில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி வேனை போலீசார் மறித்து சோதனையிட்டனர். 

gutka

அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை மூட்டை மூட்டையாக  வேனில் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, சுமார் 35 மூட்டைகளில் இருந்த ரூ.2.39 லட்சம் மதிப்பிலான 334 கிலோ குட்கா புகையிலை பொருட்களை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கார் ஓட்டுநர் ராஜஸ்தானை சேர்ந்த சாவாய் சிங்(31) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி பகுதியில் இருந்து சென்னைக்கு குட்காவை கடத்திச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.