சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.14 கோடி வசூல்!

 
samayapuram

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையா ரூ.1.14 கோடி ரொக்கப்பணம், 2.5 கிலோ தங்கம் மற்றும் 4 கிலோ வெள்ளி ஆகியவை வசூலாகி உள்ளன.

திருச்சி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில், தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்வர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியல் காணிக்கையும், தங்கம், வெள்ளியால் ஆன பொருட்களையும் செலுத்துவது வாடிக்கை.இவ்வாறு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது.

srirangam hundial

அதன்படி, கடந்த புதன் கிழமை கோவில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில், கோவிலில் உள்ள 36 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே, 14 லட்சத்து, ஆயிரத்து 777 கிடைக்கப் பெற்றது. மேலும், 2 கிலோ 492 கிராம் தங்கமும், 4 கிலோ 227 கிராம் வெள்ளியும், டாலர் உள்ளிட்ட 110 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் வசூலாகி உள்ளன. இத்தகவலை கோவில் இணைய ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.