சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.13 கோடி வசூல்!

 
samayapuram

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 13 லட்சம் ரொக்கப்பணம், 2 கிலோ தங்கம் மற்றும் 5 கிலோ வெள்ளி வசூலாகி உள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில், தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, அம்மனை தரிசித்து செல்வர். மேலும், நேர்த்திக்கடனாக காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.  கோவில் உண்டியல்கள் மாதம் இரு முறை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று காணிக்கை எண்ணும் பணி, கோவில் மண்டபத்தில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. 

hundiyal

இதில் கோவில் பணியாளர்கள், பக்தர்கள், வங்கி ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில், கடந்த 13 நாட்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 13 லட்சத்து 43 ஆயிரத்து 175 ரொக்கம் வசூலானது. மேலும், 2 கிலோ 932 கிராம் தங்கம் மற்றும் 5 கிலோ 766 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது. அத்துடன், டாலர் உள்ளிட்ட 56 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் வசூலானதாக கோவில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.