சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.85.49 லட்சம் வசூல்!

 
samayapuram

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக  ரூ.85.49 லட்சம் ரொக்கப்பணம், 2 கிலோ தங்கம் மற்றும் 3.5 கிலோ வெள்ளி கிடைக்கப்பெற்றன. 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில், தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்வர். மேலும், நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளி மற்றும் உண்டியல் காணிக்கைகள் செலுத்துவது வழக்கம்.

srirangam hundial

பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் மாதம் இரு முறை எண்ணப்படும். அதன்படி, நவம்பர் மாதத்தில் 2-வது முறையாக காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் கோவில் இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் 37 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவில் பணியாளர்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் ஈடுபட்டனர்.

முடிவில் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.85 லட்சத்து 49 ஆயிரத்து 57 ரொக்கப்பணம் வசூலானது. மேலும் 2 கிலோ 287 கிராம் தங்கம், 3 கிலோ 691 கிராம் வெள்ளி மற்றும் 276 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் வசூலானதாக கோவில் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்துள்ளார்.