சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.16 கோடி வசூல்

 
samayapuram

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.16 கோடி பணம், 1.9 கிலோ தங்கம் மற்றும் 4 கிலோ வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றன. 

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில், தமிழ்நாட்டில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி, காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

hundial

அவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதம் இரு முறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று ஜனவரி மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் மண்டபத்தில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில், உதவி ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கடந்த 20 நாட்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே, 16 லட்சத்து 53 ஆயிரத்து 286 வசூலாகி உள்ளது. மேலும், 1 கிலோ 955 கிராம் தங்கமும், 4 கிலோ 215 கிராம் வெள்ளியும், 367 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைக்கபெற்றுள்ளதாக, கோவில் இணை ஆணையர் தகவல் தெரிவித்தார்.