மணப்பாறை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி பலி!

 
drowned

மணப்பாறை அருகே கல்குவாரி குட்டையில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி 8ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கொட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். தொழிலாளி. இவரது மகள் கௌசிகா(14). இவர் கருர் மாவட்டம் தோகைமலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த சிறுமி கௌசிகா, மாலை வீட்டின் அருகே உள்ள கல்குவாரி குட்டைக்கு தனது அத்தை தனக்கொடி உடன் குளிக்க சென்றுள்ளார்.

drowned

தனக்கொடி கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த நிலையில், கௌசிகா குட்டையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற கௌசிகா, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.  இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தனக்கொடி கூச்சலிட்டார். இதனை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று குட்டையில் இறங்கி தேடினர். ஆனால், சிறுமியை மீட்க முடியவில்லை. தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சில மணிநேர தேடலுக்கு பின்னர் அவர்கள் சிறுமி கௌசிகாவை சடலமாக மீட்டனர். பின்னர் மணப்பாறை போலிசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்குவாரி குட்டையில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.