தாய் கண்டித்ததால் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை... கமுதி அருகே சோகம்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தாய் கண்டித்ததால் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கீழநரியன் கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி செல்லம்மாள். இவர்களது 11 வயது மகன் விக்னேஷ் பாண்டி. இவர் அபிராமம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், விக்னேஷ் பாண்டிக்கு நகச்சுத்தி ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனை அறிந்த அவரை தாய் செல்லம்மாள், விக்னேஷ் பாண்டியை கண்டித்து பள்ளிக்கு செல்லும்படி அறிவுறுத்தி உள்ளார். இதனால் மாணவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தகவல் அறிந்த மண்டலமாணிக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு விக்னேஷ் பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.