திருப்பூர் அருகே கிணற்றில் பள்ளி மாணவி, இளைஞர் சடலம் மீட்பு!

 
dead

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் கிணற்றில் பள்ளி மாணவி மற்றும் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே வெங்கமேட்டில் இருந்து ஆத்துப்பாளையம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் நேற்று காலை சிறுமியின் உடல் ஒன்று மிதந்தது. இதனை கண்ட அந்தபகுதி மக்கள், அனுப்பர்பாளையம் போலிசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், சிறிது நேரத்துக்குப்பின் அதே கிணற்றில் இளைஞர் ஒருவரின் சடலமும் மிதந்தது.

well

இதனை அடுத்து, போலீசார் அவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கிணற்றின் அருகே கேட்பாரற்ற நிலையில் இருந்த இருசக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த நபர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைக்காட்டிபுதுரை சேர்ந்த அஜய் மற்றும் அவிநாசியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் காதல் விவகாரத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டு உடல் கிணற்றில் வீசப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.