பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள முத்தூர் பகுதியை சேர்ந்தவர் தரணீஷ்(19). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிலையில், மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்படவே அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், அவரிடம் விசாரித்தனர். அப்போது, தரணீஷ் சிறுமியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதனை அடுத்து, சிறுமியின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் தரணீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.