ஓசூர் அருகே சரக்கு வேனில் கடத்திய 1,200 கிலோ குட்கா பறிமுதல் - ஓட்டுநர் கைது!
பெங்களுருவில் இருந்து ஒசூர் வழியாக சரக்கு வேனில் கடத்திச்சென்ற 1200 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஓட்டுநரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பொம்மண்டபள்ளி சந்திப்பு பகுதியில் நேற்று மத்திகிரி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, சரக்கு வேனில் இருந்த மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதனை அடுத்து, சரக்கு வேனில் இருந்த ரூ.6.60 லட்சம் மதிப்பிலான 1,200 கிலோ குட்கா புகையிலை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக வேன் ஓட்டுநர் சேலம் மாவட்டம் வாழப்பாடி காத்துக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பெங்களுருவில் இருந்து சேலத்திற்கு குட்கா பொருட்களை கடத்திச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, மத்திகிரி போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மேலும், குட்கா கடத்தலில் தொடர்புடைய தினேஷ், நவீன் ஆகியோரை தேடி வருகின்றனர்.