செய்யாறு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை... பாலிடெக்னிக் மாணவர் போக்சோவில் கைது!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் அழிவிடைதாங்கி மதுரா பைரவபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா (19). இவர், பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது பிளஸ் 1 மாணவி உடன் பழகி வந்துள்ளார். அப்போது, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மாணவிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் பெற்றோர் அவரை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவ பரிசோதனையில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், அவரிடம் விசாரித்தபோது கர்ப்பத்துக்கு பிரசன்னா தான் காரணம் என தெரிய வந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் பிரசன்னா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.