வீட்டில் தனியாக இருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை... இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே வீட்டில் தனியாக இருந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் சமையல் தொழிலாளி. இவரது மனைவி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு 4 வயதில் மகன், மகள் உள்ளனர். மேலும், சமையல் தொழிலாளி மனைவியின் சகோதரியின் 9 வயது மகள் மற்றும் மகனும், அவர்களது வீட்டில் தங்கியிருந்தனர். இந்த நிலையில், சம்பவத்தன்று அந்த பெண் தனது மகனுடன் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இதனால் அவரது மகளும், சகோதரியின் 2 பிள்ளைகளும் பக்கத்து வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அஸ்வின்(30) என்ற இளைஞர், சிறுமிகள் இருவருக்கும் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமிகள் சத்தமிடவே, பக்கத்து வீட்டினர் ஓடிச் சென்று பார்த்துள்ளனர். இதனால் அஸ்வின் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதனை அடுத்து, அவர்கள் சிறுமிகளை மீட்டுள்ளனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், மகளிர் போலீசார் அஸ்வின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.